மழைக்காலம் வருவதற்கு முன்னர் அனைத்து மக்களையும் மீள்குடியமர்த்தி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
திருமலை மாவட்டத்தின் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கடற்கரைச் சேனை, கூனித்தீவு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான கலந்துரையாடலில், மீள்குடியேற்ற அமைச்சர் வி.முரளிதரன் இன்று காலை ஈடுப்பட்டார். இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை காலை கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து உரையாடிய அமைச்சர், மக்களிடமே அவர்களுக்கான இடங்களைத் தெரிவு செய்து தருமாறு கேட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்.
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 2000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பட்டித்திடல், மணல்சேனை, கட்டைபறிச்சான், கிளிவெட்டி ஆகிய இடங்கிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான வேலைகளில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் தீவிரமாக ஈடுப்பட்டுவருகிறார்.
மீள்குடியமர்த்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்திய அமைச்சர், முகாமைச் சுற்றி பார்வையிட்டதுடன். மக்களின் குறைகளையும் கேட்டறிந்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.எச் ஹலிபா, மீள்குயேற்ற அமைச்சின் இனைப்புச் செயலாளர் ரவிந்திரன், கிளிவெட்டி முகாம் பொறுப்பாளரும், கிராம சேவையாளருமான செல்வ ரெட்ணம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.