Tuesday, February 1, 2011

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை மட்டு., திருமலையில் வெள்ள அபாயம் நிரம்பி வழியும் நிலையில் 29 குளங்கள்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் 29 குளங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது. பாரிய வெள்ளத்தின் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த கிழக்கு மக்கள் தொடர் மழையினால் மீண்டும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அரச அதிபர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு அருகில் கிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கால நிலை அவதான நிலையம் கூறியது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை 8.00 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் திருகோண மலையில் 92.8 மி. மீ. உம் வவுனியாவில் 92.0 மி. மீ. உம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
தொடர் மழையினால் நாட்டிலுள்ள 59 குளங்களில் 58 குளங்களின் நீர் மட்டம் 75 வீதத்தை விட அதிகரித்துள்ள தாக நீர்ப்பாசனத் திணைக்கள நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.
திருகோணமலையில் 3 குளங்களும் பொலன்னறுவையில் 4 குளங்களும் அநுராதபுரத்தில் 8 குளங்களும் குருணாகலை யில் 8 குளங்களும் பதுளையில் 4 குளங் களும் வவுனியாவில் இரு குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் தெரிவித்தார். பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகளும் கவுடுல்ல அணைக்கட்டின் 8 வான் கதவுகளும் ராஜாங்கனை அணைக் கட்டின் 2 வான் கதவுகளும் மின்னேரிய குளத்தின் 7 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டு மூன்று முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெருகலில் 5 குடும்பங்களும் தம்பலகாமத் தில் 19 குடும்பங்களும் குச்சவெளியில் 50 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.
பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சகல உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரவீர கூறினார்.

No comments:

Post a Comment