Monday, December 7, 2009

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுக் கூட்டதில் இரண்டரை வருடங்களின் பின் கூட்டமைப்பு எம்.பிக்கள் பங்கேற்பு....

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற போது மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டரை வருடங்களின் பின்னர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர்களான எஸ்.எச்.அமீர் அலி ,விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) மற்றும் மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ,தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச காணிகளில் அத்து மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டினர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவிலியாமடு மற்றும் மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பிரதேசமான தோணி தாண்ட மடு ஆகிய இடங்களில் தொடரும் சட்டவிரோத குடியேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் ,மாகாண காணி ஆணையாளர் ,பிரதேச செயலாளர் பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்னர் சமர்ப்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கல்முனை வீதியில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் முன்பாக மூடப்பட்டுள்ள வீதியை உடனடியாக திறந்து பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment