Thursday, December 31, 2009

அன்னை மரியின் படத்தில் அதிசயக் கரங்கள்: வவுனியாவிலும் சம்பவம்

வவுனியா கூமாங்குளத்தில் வீடொன்றில் மாதா உருவப்படத்தில் திடீரென இரண்டு கைகள் தோன்றியுள்ளன. மாதாவின் உருவத்தை ஏந்தியிருப்பது போன்ற வகையில் இந்தக் கைகள் இரண்டும் காணப்படுகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளதாக அந்த வீட்டுக்காரராகிய அகிலன் கவிதா என்ற குடும்பப் பெண் தெரிவித்தார். கூமாங்குளத்தில் உள்ள சாயி சிறுவர் இல்லத்திற்கருகில் இந்தப் பெண் வசித்து வருகின்றார். இரண்டு குழந்தைகளின் தாயாராகிய அவர் நேர்த்திக் கடன் ஒன்றை நிறைவேற்றுவதற்காகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மடுக்கோவிலுக்குச் சென்றபோது, மாதாவின் இரண்டு உருவப்படங்களை வாங்கி வந்ததாகவும், அவற்றில் ஒன்றிலேயே இவ்வாறு இரண்டு கைகள் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாதா படத்தில் தோன்றியுள்ள இந்த அதிசயக் கைகளை தரிசிப்பதற்காக தினசரி பெருமளவிலான மக்கள் அவரது வீட்டிற்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை இது போன்று மடு அன்னையின் திருவுருவப் படத்திலிருந்து அதிசயக் கரங்கள் இம்மாதம் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டிலும், கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டிலும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment